பட்டு வளர்ப்பு அல்லது பட்டுப்புழு வளர்ப்பு
இதனை ஆங்கிலத்தில் Sericulture, அல்லது silk farming என்று அழைக்கப்படுகிறது
Sericulture பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் மல்பெரி சாகுபடிவழிமுறைகள்
மல்பெரி சாகுபடி
விவசாயம் சார்ந்தத் தொழில்களில் குறைந்த நாட்களில் வருமானம் தரக்கூடியது, பட்டுக்கூடு உற்பத்தி தான். இந்தியாவில் பட்டுப்புழு வளர்ப்பு முக்கியக் குடிசைத் தொழிலாக உள்ளது. இன்று உலகப் பட்டு தயாரிப்பில் 60% இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கப்படுகிறது. நம் நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காம் இடம் வகிக்கின்றது. இந்நிலையில் இங்கு பட்டு நூல் தேவையும் அதிகளவில் உள்ளது.
சராசரியாக ஒரு புழுவானது ஒரு மைல் நீளத்திற்கு இழைகளை இரண்டு மூன்று நாட்களில் தனது கூட்டில் உருவாக்குகிறது. மிகக் குறைந்த அளவே பயன்படுத்தத்தக்க பட்டானது ஒரு கூட்டிலிருந்து கிடைக்கிறது. மஞ்சள் நிறக் கூடுகளை விட வெள்ளைக்கூடுகளுக்கு அதிக விலை கிடைக்கிறது.
மல்பெரி சாகுபடி
பட்டுப்புழுக்கள் நன்கு வளர நல்ல சத்தான மல்பெரி இலைகள் முக்கியமாகும். எம்.ஆர்.-2 , எஸ்-36 மற்றும் ,வி-1 ஆகிய இனங்கள் நல்ல சத்தான இலைகள் மற்றும் அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடியது, எனவே பட்டு வளர்ப்பிற்கு ஏற்றதாகும்.
மல்பெரி நடவு முறை
நல்ல விளைச்சளுக்காக இணை வரிசை நடவு முறையைப் பின்பற்றலாம். இம்முறையில் 3 அடி x 2 அடி இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. இடைவெளி அதிகமாக இருப்பதால் உழவு செய்வதற்கும், அறுவடை செய்த இலைகளை எடுத்துச் செல்வதற்கும், சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கும் ஏற்றதாக இருக்கும்.
மல்பெரி இலைகளுக்கான உரங்கள்
நல்ல மகசூல் எடுக்க 1 ஏக்கருக்கு 8 முதல் 10 டன் தொழுவுரம், 4 முதல் 5 டன் கோழி எரு ஆகியவற்றைக் கொட்டி இறைத்து, நன்றாக உழவு செய்ய வேண்டும்.
களை நீக்குதல்
களையை நீக்காவிட்டால் மல்பெரி இலைகளில் பூச்சிதாக்குதல் நேரிடும். இலை அறுவடைக்கு பின்னர் மண்வெட்டியால் மண்ணை கொத்திவிட வேண்டும் அல்லது கிளைபோசேட் இரசாயன களைக்கொல்லியை கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
பூச்சிகளின் இனப்பெருக்க காலமான நவம்பர் முதல் பிப்ரவரி வரையுள்ள மாதங்களில் அதிக அளவு இலைச்சேதம் ஏற்ப்படும். இலை சேதத்தைக் கட்டுப்படுத்த டைக்குளோர்வோஸ் (Dichclorvos) இரசாயன பூச்சி கொல்லி மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு மில்லிலிட்டர் மருந்து என்ற விகிதத்தில் தெளிக்கவேண்டும்.
நீர் மேலாண்மை
ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை செடிகளை நடவு செய்ய முடியும். நடவு செய்த பிறகு சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கவும் அரசு மானியம் வழங்குகிறது.
பட்டுப்புழு வளர்ப்பில் இளம்
இளம் புழு வளர்ப்பு மனை
பட்டுப்புழு முட்டைத் தொகுதிகளை பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில், வாங்கி அடை வைக்க வேண்டும். மனைக்குள் தட்பவெட்பம் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.மனையைச் சுற்றிலும் கொசு வலை அடித்து தென்னங்கீற்று வேய்ந்து, மனைக்குள் தட்பவெட்பம் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றிற்கு கொழுந்து மல்பெரி இலைகளைப் பறித்து உணவாக வைக்க வேண்டும். முட்டை பொரிந்து வெளிவரும் புழுக்களை, எட்டாம் நாள் வரை இளம்புழு வளர்ப்பு மனையில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.
பிரத்யேகமானப் புழு வளர்ப்பு தாங்கிகள்
பட்டுப்புழு வளர்ப்பிற்கான புழு வளர்ப்பு தாங்கிகளில் நூற்றுக்கணக்கான அறைகள் கொண்ட ‘நெட்ரிக்கா‘ எனும் பிளாஸ்டிக் விரிப்பை விரிக்க வேண்டும். எட்டு நாட்கள் ஆனா புழுக்களை அதில் விட வேண்டும். காலையும் மாலையும் நன்கு முற்றிய மல்பெரி இலைகளை உணவாக வைக்க வேண்டும். ஒரு மாதத்தில் புழுக்கள் கூடுகளை அமைத்திருக்கும், அதுவே அறுவடையான நேரமாகும்.
குறிப்பு:
பட்டுபூச்சி வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பண சேமிப்பு தொழில் நுட்பம் விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்க உதவி புரிகிறது. இதில் பட்டுப்புழு வளர்ப்பிற்கான தனி வளர்ப்பறை, பட்டுப்பூச்சியின் உணவான மல்பெரி சாகுபடி, 100% கிருமி நீக்கப்பட்ட இளம் புழுக்கள் உற்பத்தி மற்றும் பல வழிமுறைகள் அடங்கும்.

