விலைவாசியை சமாளிக்க காய்கறித் தோட்டம் நாமே உருவாக்கினால் என்ன!?

விலைவாசியை சமாளிக்க காய்கறித் தோட்டம் நாமே உருவாக்கினால் என்ன!?

வீட்டிலேயே தோட்டம் அமைப்பதன் அவசியம் பற்றி சென்னை புதுக் கல்லூரியின், முன்னாள் துணை முதல்வர் சுல்தான் அகமது இஸ்மாயில் சொல்வதை கேளுங்களேன்…

எனக்கு சுற்றுச்சூழல் மற்றும் மண்புழுக்களை ஆராய்வதில் மிகுந்த ஆர்வம். இதுதொடர்பாக உரையாற்ற, பயிற்சியளிக்க என, பல வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளேன்.

தற்போது, காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், வீட்டிலேயே தோட்டம் அமைக்க, சிலருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எல்லாருக்குமே, வீட்டு தோட்டம் அமைப்பதில், விழிப்புணர்வு தேவை. பெரிய பெரிய கட்டடங்களின் சுவர் வெடிப்புகளில், அரச மரமே வளரும் போது, கைப்பிடி மண்ணில், ஏன் காய்கறி செடியை வளர்க்க முடியாது என்ற, நேர்மறையான சிந்தனை இருந்தாலே, ஒரு பைசா கூட செலவில்லாமல், நாமே கொத்து கொத்தாக காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். இதனால், விண்ணை முட்டும் விலைவாசியில் இருந்து எளிதில் தப்பிக்கலாம்.

நாம் தூக்கி எறியும் பிளாஸ்டிக் டப்பா, பெயின்ட் வாளிகளை முதலில் சேகரிக்க வேண்டும். குப்பையாக தூக்கி எறியும் காய்கறி கழிவுகளை, மண்ணுடன் சேர்த்து அதில் போட்டால், இயற்கை உரம் ரெடி. அத்துடன் சிறிது மண்ணை சேர்த்து, சற்று அழுகிய அல்லது உடைந்த தக்காளியை பிழிந்தால், சில நாட்களில் தக்காளி செடி முளைக்கும். சந்தையில் விற்பனையாகும், மற்ற காய்கறி விதையும் போடலாம்.

தேங்காய் நார், ஒரு மிக சிறந்த நீர் தேக்கி. அதை மண்ணுக்குள் புதைத்து, காய்கறி அலசிய நீரை ஊற்றினாலே போதும்; ஒரு வாரத்திற்கு தாக்கு பிடிக்கும்.

வீட்டு தோட்டம் என்றாலே, பூச்சிகள் அதிகம் இருக்கும் என்ற பயம் வேண்டாம்.

இஞ்சி, பூண்டு, பெருங்காயத்தை 100 கிராம் வீதம் சேர்த்து அரைத்து, 10 லிட்டர் நீரில், 15 நாட்கள் ஊற வையுங்கள். பசுவின், 1 லி., கோமியத்துடன், 9 லி., நீர் சேர்த்து ஊற வைத்து, அந்த இரண்டையுமே செடிகளின் மீது தெளித்தால், பூச்சி தாக்குதல் இருக்காது. அனைத்தும் இயற்கை முறை என்பதால், எந்த பாதிப்பும் வராது. குடும்ப செலவும் மிச்சப்படும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline