”காராம் பசு என்பது தனி இனம் கிடையாது. நாட்டு இன மாடுகளுக்குப் பிறக்கும் கன்றுக் குட்டிகளில் நாக்கு முதல் மடிக்காம்பு வரை முழுவதும் கருப்பாக உள்ள பசுக்கள் ‘காராம் பசுக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. இவை போடும் கன்றுகள்கூட சமயங்களில் ‘காரம் பசு’வாக இருப்பதுண்டு. இப்படி அரிதாகப் பிறக்கும், இந்தப் பசுக்களின் பாலில் மருத்துவ குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதன் பால் கெட்டியாகவும், இதிலிருந்து தயாரிக்கப்படும் நெய், வாசனையுடனும் இருக்கும் என்பது ஆச்சரியமான செய்தி. முற்காலங்களில் புகழ் பெற்ற கோயில்களில் காராம் பசுவின் பாலில்தான் அபிஷேகம் செய்திருக்கிறார்கள். இன்றும்கூட காராம் பசுவின் பாலை வழிபாட்டுக்கு பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது.
இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் ஐந்துக்கு மேல் காரம் பசுக்கள் இருப்பதே அரிதுதான். அதனால்தான் அந்த பசு மாடு ஒன்றின் விலை 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. தாராபுரம் பகுதியில் சில விவசாயிகள் காராம் பசுவை வளர்த்து வருகிறார்கள்.”