மூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க!!!!!

மூலிகை குடிநீர் தயாரிக்கலாம் வாங்க!!!!!

பெட்பாட்டில் குடிநீர் கூட உடலுக்கு பாதுகாப்பற்றது என்று தற்போது விஞ்ஞானிகள் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. எது தான் நல்ல குடிநீர் என்று குழப்பமாகவே இருக்கிறது.

வீட்டிலேயே சுவைமிகுந்த மூலிகை குடிநீரை தயாரித்து அருந்த முடியும். இதற்கு பெரிதாக செலவும் இல்லை. இந்த மூலிகை குடிநீரை தயாரிக்க நீங்கள் உருவாக்கும் அமைப்பை பார்த்து உங்களை தேடி வரும் விருந்தினர்கள், அக்கம்பக்கத்தினர் எல்லாம் அதிசயித்து போவது உறுதி.

தயாரிக்கலாம் வாங்க….
மூலிகை குடிநீரை தயாரிக்க உங்களுக்கு தேவைப்படுவது எல்லாம், சாதாரண அழகு செடிவளர்க்கும் மண் தொட்டிகள் அல்லது தண்ணீர் நிரப்ப பயன்படும் மண்பானைகள் தான். உங்களுக்கு நாளன்றுக்கு எவ்வளவு மூலிகை குடிநீர் தேவைப்படும் என்பதை பொறுத்து, அதற்கேற்ப தொட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த தொட்டியை வாங்கி வந்த பிறகு இந்த தொட்டிகளின் கீழ்பகுதி முழுக்க கூழாங்கற்களை போடுங்கள். இதற்கடுத்து இந்த கூழாங்கற்களின் மேல் பெருமணலை நிரப்புங்கள். இந்த இரண்டு அடுக்குகளை அடுத்து இதன் மீது மிகச்சிறிய கண்ணுள்ள நைலான் வலையை ( டீ வடிகட்டியில் இருக்கும் வலை) விரித்து விடுங்கள். இப்படி நைலான் வலையை விரிக்கும் போது இந்த அடுக்குக்கு மேல் நாம் நிரப்ப போகும் பொருட்களில் இருந்து வெளியேறும் தூசு, தும்புகள் வடிகட்டப்பட்டு விடும்.

இதற்கடுத்து இந்த நைலான் வலைக்கு மேல் மண், மணல், மக்கிய எரு ஆகியவை கொண்ட எருவை போட்டு மூலிகை செடிகளை நடவு செய்யுங்கள். அதாவது வீட்டில் இஞ்சியை பயன்படுத்துவோம். அளவுக்கு அதிகமாக இஞ்சியை வாங்கி வந்து வீட்டில் வைத்திருக்கும் போது, மீதமுள்ள இஞ்சியை சில அம்மணிகள் மணலில் போட்டு ஈரமாக இருக்கும் படி வைத்திருப்பார்கள். சில நேரங்களில் இந்த இஞ்சி தளிர் விட தொடங்கி விடும். இது தான் மூலிகை செடி தொட்டி எனலாம். இதே போல் மஞ்சள், வசம்பு, தூதுவளை, செம்பருத்தி போன்ற செடிகளை நடவு செய்யலாம். இந்த செடிகளை நட்டவுடன், நடவு செய்யப்பட்ட தொட்டிகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கும் படி செய்ய வேண்டும். அதற்கு இந்த தொட்டிகளில் உள்ள செடிகளுக்கு ஊற்றப்படும் தண்ணீர் எஞ்சி வெளியேறும் போது அது ஒரே இடத்தில் சேகரமாகும் படி ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதாவது, இந்த தொட்டிகள் அனைத்தும் சிமெண்ட்டால் ஆன ஒரு பாத்தியில் வரிசையாக இருக்கும்படி அமைத்துக் கொண்டால் இந்த தொட்டியிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஒரு இடத்தில் சேகரமாகும் படி வழிந்தோடும்.

இந்த அமைப்பை உருவாக்கிக் கொண்டபின் முதல் மூன்று நாட்களுக்கு இந்த தொட்டிகளில் இருந்த வெளியேறும் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். காரணம், இதில் ஏராளமான மாசுக்கள் கலந்திருக்கும். பிறகு இதிலிருந்து கிடைக்கும் தண்ணீரை பிடித்து குடிநீராக பயன்படுத்தலாம். இந்த மூலிகை தொட்டியிலிருந்து கிடைக்கும் தண்ணீரை குளிக்கும் தண்ணீருடன் கலந்து குளிநீராக பயன்படுத்தலாம். இதில் ஒரு விசேடம் என்னவென்றால், உங்களுக்கு எந்த மூலிகை பிடிக்கிறதோ, அந்த மூலிகை செடியை வாங்கி வந்து ஒரு தொட்டியில் நட்டு இந்த அமைப்பில் இணைத்து விடலாம்.

உதாரணமாக கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். முடக்கத்தான் என்று சொல்லப்படும் மூலிகை தாரளமாக ரோடுகளின் ஓரத்தில் கூட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வளர்ந்து கிடக்கிறது. இந்த மூலிகை செடியை வேருடன் எடுத்து வந்து தொட்டியில் நட்டு அந்த தொட்டி வழியாக வெளியேறும் மூலிகை தண்ணீரை நன்றாக கால் முட்டுகளில் படும்படி குளிக்கலாம். இதனால் மூட்டுவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

இது போல் பிரண்டை, இஞ்சி போன்ற செடிகளை பயன்படுத்தினால் பித்தம் நீங்கும். குழந்தைகளை நல்ல மூலிகை தண்ணீரில் குளிப்பாட்ட விரும்புபவர்கள் துளசி போன்ற செடிகளை தொட்டிகளில் வளர்த்து அதன் வழியாக வெளியேறும் நீரை குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். தும்பை, நொச்சி செடிகளை சளியால் அவதிப்படுபவர்கள் மூலிகை குடிநீராக, குளியல் நீராக பயன்படுத்தினால் வெகுவிரைவில் சுகமான நிவாரணம் கிடைக்க காணலாம். வீட்டை சுற்றி தோட்டம் போட அதிக அளவு இடம் இருப்பவர்கள் அதிக அளவு மூலிகை செடிகளை வளர்த்து பயன்படுத்தலாம்.

நல்ல கிரியேடிவிடி உள்ள நண்பர்கள் இந்த தொட்டிகளில் இருந்து வெளியேறும் நீரை குளுக்கோஸ் டியூப் போன்ற குழாய் மூலம் அனைத்து தொட்டிகளையும் இணைத்து இதன் வழியாக நீரை பிடித்து பயன்படுத்தலாம். இந்த நீரிலும் நுண்கிருமிகள் இருக்கலாம் என்று சந்தேகிப்பவர்கள் நிலக்கரி துண்டு ஒன்றை நீர் சேகரமாகும் கடைசி பாத்திரத்தில் போட்டு வையுங்கள். இந்த நிலக்கரி நீரிலுள்ள நுண்கிருமிகளை எல்லாம் கொன்று விடும்.
பிறகென்ன…காடுமலைகளில் கிடைக்கும் அதே மூலிகை தண்ணீர் உங்கள் வீட்டிலும் அன்றாடம் கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline