பச்சை தங்கம் அல்லது பணம் காய்க்கும் மரம்!

அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம்”

bamboo-garden-pannaiyar
-இப்படி, அரசியல் தலைவரை புகழ்வது போல மூங்கிலைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார் அம்மாபேட் டையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன். வாண்டையார்இருப்பு கிராமத்தின் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் வேளாண் கல்வி ஆசிரியராக இருக்கும் இவரிடம் மூங்கிலைப் பற்றி ஆரம்பித்தால் மணிக்கணக்கில் பேசிக்கொண்டே போகிறார்.

”மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. தாவர இனங்களிலேயே மிக வேகமாக வளரக்கூடிய ஒரே தாவரமும் மூங்கில்தான். ஒரே நாளில் ஒன்று முதல் நான்கு அடி உயரம் வளரக்கூடியது” என்றெல்லாம் அற்புதத் தகவல்களைச் சொல்லும் இவர், நான்கு ஏக்கரில் தோட்டம் அமைத்து மிகப்பெரிய அளவில் மூங்கில் வளர்ப்பு செய்கிறார். வெண்ணாற்றுப் படுகையின் மேற்கில் உள்ள கோட்டூர் காந்தாவனம் என்ற கிராமத்தில்தான் இவரது மூங்கில் தோட்டம் இருக்கிறது. உள்ளே சென்றதும் ‘மூங்கில்தானா?’ என திகைத்துப் போனோம். அந்த மூங்கில் கன்றுகளில் ஒன்றில் கூட முள் இல்லை.

‘‘உலகத்துல 111 வகையான பேரின மூங்கிலும், 1,575 வகையான சிற்றின மூங்கிலும் இருக்கு. இதுல ரெண்டே ரெண்டுல மட்டுந்தான் முள் இருக்கும். அதைத்தான் கல் மூங்கி, தொப்பை மூங்கினு நாம சொல் றோம். இந்த ரெண்டு மட்டுந்தான் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும்’’ என்று நம் ஆச்சர்யத்துக்கு பதில் தந்தவர்,

‘‘பதினாறு வருஷத்துக்கு முன்னாடி, இந்தத் தோட்டத்துல, சாதாரண மூங்கில் கன்னுதான் வாங்கி நட்டு வச்சேன். ஆனா, வெட்றதுக்கு ஆள் கிடைக்கல. அந்தளவுக்கு இந்தத் தோட்டம் முழுக்க, மூங்கிலே தெரியாத அளவுக்கு முள்ளா மண்டிருச்சி. ஒவ்வொரு வருஷமும் ஆள் தேடியே அலுத்து போச்சு. மனசு வெறுத்துப்போயிட்டேன். எல்லாத்தையும் புல்டோசர் வெச்சி அழிச்சிட்டேன்.
இந்தச் சூழல்ல வனத்துறை சார்பா அம்மாபேட்டையில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்துது. அங்கதான் முள் இல்லா மூங்கிலை பத்தி நிறைய தெரிஞ்சிகிட்டு அதை பயிரிட ஆரம்பிச்சேன்.

பாலசுப்ரமணியன்  முள் இல்லா மூங்கில்ல அளவிட முடியாத அளவுக்கு பலன் இருக்கு. நல்லா உறுதியா இருக்குறதால, கட்டுமான பணிக்கு ரொம்பவே உதவியா இருக்கும். ஆயிரத்துக்கும் அதிகமான, விதவிதமான கைவினை பொருள்கள் செய்யலாம். அழகழகான நாற்காலி, பொம்மை, கூடை, பாய், பலவிதமான இசைக் கருவிகள், மின் விளக்குகள்ல பொருத்துற மாதிரியான, கலைநயம் மிக்க குடுவை இப்படி ஏகப்பட்டது சொல்லிக்கிட்டே போகலாம். இதைவிட ஆச்சர்யம், இது மூலமா துணியே தயாரிக்குறாங்க. பருத்தித் துணியைவிட இது வியர்வையை நல்லா உறிஞ்சும். அதனால இதுக்கு அமோக வரவேற்பு இருக்கு” என பயன்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போனவர், ஒரு ஆல்பத்தை காட்டிய போது நாம் அசந்து போனோம். சினிமாவில் வருவது போன்ற அழகழகான மர வீடுகள், ஃபோட் டோவில் பளிச்சிடுகின்றன. அவை அனைத்துமே முள் இல்லா மூங்கிலில் தயாரிக்கப்பட்டவை.
கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இம்மாதிரியான முள் இல்லா மூங்கில் மரத்தைக் கொண்டு முழுவீட்டையும் கட்டி முடித்திருக் கிறார்கள். தரை, சுவர் என அனைத்துமே மூங்கில் கொண்டு அமைத்து விடுகிறார்கள். இதில் இருந்து வீட்டு உபயோக பொருட்களும் தயாரிக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு இது மாற்று என்பதால் சுற்றுச்சூழலுக்கு நன்மை விளைவிக்கிறது.

அவர் காட்டிய மற்றொரு ஆல்பம் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்தது. கேரளாவில், முள் இல்லா மூங்கிலின் குருத்தை உணவுக்குப் பயன்படுத்து கிறார்கள். சத்தும், சுவையும் நிறைந்த குருத்துணவுக்கு அங்கு ஏகப்பட்ட வரவேற்பு. இதன் சமையல் செய்முறைதான் புகைப் படங்களாக அந்த ஆல்பத்தை அலங்கரித்துக்கொண்டிருந்தன.
‘‘முள் இல்லா மூங்கில்ல, மொத்தம் பதினைஞ்சு ரகம் இருக்கு. அதுல நாலு ரகம் நம்ம தோட்டத்துலேயே இருக்கு. பேம்புசாவல் காரியஸ்தான்ங்கற ரகத்தை இங்க அதிகமா வெச்சிருக்கேன். பேம்புசா நியூட்டன், டூல்ட்டா, பல்கூவா வகைகளும் ஓரளவுக்கு கணிசமா இங்க இருக்கு’’ பேசிக்கொண்டே மூங்கில் தோட்டத்தின் உள்ளே அழைத்துச் சென்றார். சிறிது தூரம் நடந்தபோது பேச்சு சுவாரஸ்யத்தையும் மீறி வித்தியாசமான உணர்வு…. மெத்தையில் நடப்பது போல் இருந்தது. கீழே தரை தெரியாத அளவுக்கு சருகுகள்.
”இதோட சருகுதான் இதுக்கு உணவு. முள்ளில்லா மூங்கில் தனக்குத்தானே உணவு கொடுத்துக்கும். தன்னோட இலை தழைய மட்டுமே சாப்பிட்டு இவ்வளவு பெரிய பலசாலியா வளர்ந்திருக்கு பாருங்க. இதுக்குப் பெரிசா செலவே இல்லை. பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. ஒரு தடவை ஒரு கன்னு வெச்சுட்டா, அஞ்சு வருஷத்துக்குப் பிறகு பலன்தான். தொடர்ந்து 150 வருஷம் வரைக்கும் வெட்டிக்கிட்டே இருக்கலாம். அதுமட்டுமில்லாம, ஒரு குருத்துல இருந்து வருஷத்துக்கு ரெண்டு குருத்து உருவாகும். அதுல இருந்து ரெண்டு ரெண்டா அப்படியே பெருகிகிட்டே இருக்கும்” என ஆர்வம் பொங்க பேசிக்கொண்டே போனவர், மகசூல் விஷயத்துக்குள் வந்தார்.

”ஒரு ஏக்கர்ல முள் இல்லா மூங்கில் போட்டா, வருஷத்துக்கு பன்னிரண்டு டன் சருகு உதிர்க்கும். இதுல இருந்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள மண்புழு உரம் தயாரிக்கலாம். குருத்து மூலமாவும், அறுபதாயிரம் கிடைக்கும். ஒரு மரம் அம்பது ரூபா வரைக்கும் விலை போகும். அப்படினா, ஒரு ஏக்கர்ல வருஷத்துக்கு இரண்டாயிரம் மரம் அறுத்தா அது மூலமாக மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும்” என்று கணக்குப்போட்டுச் சொல்லும் இவர், பிரபல தொழில் அதிபர்களுக்கு முள் இல்லா மூங்கில் தோட்டம் அமைத்து கொடுத்திருக்கிறார். மத்திய அமைச்சர் ராசாவிடம் இருந்து மூங்கில் வளர்ப்புக்கான நற்சான்றிதழ் வாங்கியிருக்கிறார். இவரைத் தொடர்புகொள்ள அலைபேசி: 94864-08384

பாலசுப்ரமணியன் சொல்லும் வளர்ப்பு முறை…
பனிப் பிரதேசம் மற்றும் பாலைவனப் பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலுமே முள் இல்லா மூங்கில் நன்கு வளரும். குறிப்பாக டெல்டா பகுதிகளில் மிகவும் சிறப்பாக செழித்து வளரும். ஒரு ஏக்கரில் அதிகபட்சம் 150 கன்றுகள் நடலாம். குறைந்தபட்சம் 110 கன்றுகள் நடலாம்.
ஆறு மீட்டர் இடைவெளியில் குழிகள் போட வேண்டும். ஒவ்வொரு குழியும் ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் இருக்க வேண்டும். அந்தக் குழியில் மண்புழு உரம், தொழு எரு, வேர் பூசணம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பஞ்சகவ்யா, சாம்பல், தென்னை நார் கழிவு ஆகியவற்றை கலந்து குழியினை நிரப்ப வேண்டும்.
குழிகளைச் சுற்றி சிறிய வரப்பு அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் மாலை குழியின் நடுவில் கன்று நட வேண்டும். கன்றை சுற்றிலும் கையால் அழுத்தி விட வேண்டும். அதிலிருந்து வாரம் இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இரண்டாம் வருடம் வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். மூன்றாம் வருடம், மாதத்துக்கு இரண்டு முறை போதுமானது. அடுத்தடுத்த வருடங்களில் முறையாக தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீர் பாய்ச்சும் வசதி இருந்தால் இன்னும் செழிப்பாக வளரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline