குழந்தை வரம் தரும் நெருஞ்சி

சாலை ஓரங்களிலும், விளை நிலங்களிலும் களைச்செடியாக முளைத்திருக்கும் நெருஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. பெண்களின் கருப்பை கோளாறுகளை நீக்குவதோடு, ஆண்களின் ஆண்மையை பெருக்கி குழந்தை வரம் தரும் அற்புத மூலிகை என்று சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெருஞ்சியின் மருத்துவ குணம் பற்றி சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருஞ்சி இலையில், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை காணப்படுகின்றன. இது பாலியல் பிரச்சினைகளையும், சிறுநீர் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. இதன் மருத்துவகுணம் பண்டைய கிரேக்க நாடுகளிலும், சீனா, வியட்டநாம், போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது.

பெண்களுக்கு நிவாரணம்

நெருஞ்சி வேரை எலுமிச்சம் பழம் சாறு கொண்டு அரைத்து குடித்துவர பூபடையாத பெண்கள் பூபெய்துவர். நெருஞ்சி இலைகளை 50 கிராம் அளவு சேகரித்து அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை பாதியாக காய்ச்சி தினசரி சிறிதளவு சாப்பிட்டு வர பெண்களின் கருப்பை கோளாறுகள் நீங்குவதோடு குழந்தை பேறு உண்டாகும்.
நெருஞ்சி செடியை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து 2 கிராம் அளவு பாலுடன் கலந்து காலை மாலை இருவேளை குடித்து வர வெட்டை நோய் குணமாகும்.

ஆண்மை பெருக

நெருஞ்சி முள்ளை சேகரித்து அதை பசும்பாலில் வேகவைத்து உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் 2 கிராம் அளவு எடுத்து பாலுடன் கலந்து காலை மாலை இருவேளைகள் அருந்தி வர வீரிய விருத்தி உண்டாகும், ஆண்மை பெருகும்.
நெருஞ்சி இலையை வெள்ளாட்டு பாலுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்து குடித்துவர ஆண்மை அதிகரிக்கும்.

சிறுநீர் கோளாறுகள்

விவசாயிகளுக்கும் பாதங்களுக்கும் எதிரியான நெருஞ்சி முள், சிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும். சிறுநீரகக் கோளாறு, சிறுநீரகக் கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படும். ரத்த சுத்திக்கும், சிறுநீர் தடையின்றி போவதற்கும் மருந்து தயாரிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், நெருஞ்சி முள்ளை சுடுநீரில் கொதிக்க வைத்து கசாயமாக உட்கொண்டால் சிறுநீர் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
சிறுநீர் பாதையில் எரிச்சலோ, வலியோ காணப்பட்டால் நெருஞ்சி செடியுடன் நித்யகல்யாணி பூ சம எடை எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி பாலும் சர்க்கரையும் சேர்த்து காலையில் மட்டும் குடித்துவர அந்த பாதிப்பு குணமாகும்.

சிறுநீரக கல் அடைப்பு

நெருஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர சிறுநீரில் ரத்தம் வெளிப்படுதல் குணமாகும்.
சிதைத்த நெருஞ்சி முள் 50 கிராம், கொத்தமல்லி 5 கிராம், ஆகியவற்றை எடுத்து அவற்றுடன் நீர் சேர்த்து காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி 60 மில்லி அளவு காலை மாலை இருவேளை குடித்துவர கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர் எரிச்சல் போன்ற சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
நெருஞ்சி விதை, மற்றும் வெள்ளரி விதை இவையிரண்டையும் சம அளவு எடுத்து பொடிசெய்து வைத்துகொண்டு அதில் 2 கிராம் அளவு எடுத்து இளநீரில் கலந்து உட்கொண்டுவர கல் அடைப்பு நோய் குணமாகும்.
கண் எரிச்சல் குணமடையும்
உடல் சூடு காரணமாக சிலருக்கு கண் எரிச்சல் ஏற்படும். அவர்கள்
நெருஞ்சி செடி மற்றும் அருகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து அதை மண் சட்டியிலிட்டு நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்துவர கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல், உடல் உஷ்ணம் போன்றவை குணமாகும்.
மஞ்சள் காமாலைக்கு நிவாரணம்
நெருஞ்சி வேர் கீழாநெல்லி வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து இளநீரில் கலந்து குடித்துவர மஞ்சள் காமாலை நோய் தணியும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

you're currently offline